எனது புத்தக அனுபவங்கள்

எனக்கு புத்தகங்கள் படிப்பது என்றால் அலாதி பிரியம், நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் நான் விரும்பி படித்தவை காமிக்ஸ் புத்தகங்கள், விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற கதைகள் படித்து வந்தேன்.ஆனாலும் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் தான் எனக்கு விருப்பம் அதிகம். அதில் வரும் படத்துடன் கூடிய கதைகளை படிப்பதில் ஒரு தனி பிரியம், அதிலும் மாயாவி, கரும்புலி, கௌபாய், ஜேம்ஸ்பாண்ட் போன்ற கதைகள் மிக பிடித்தவை. காமிக்ஸ் புத்தகங்கள் யார் வீட்டில் உள்ளது என்று தேடி பிடித்து படித்து எப்படியாவது படித்து விடுவேன்.

பின்பு தினசரிகளில் வார வாரம் வரும் இணைப்பு புத்தகங்கள், ஆனந்தவிகடன், குமுதம் போன்றவைகளும் படிப்பேன். இத்தனையும் நான் படிப்பது நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கி வந்துதான். ஒரு முறை நண்பன் ஒருவனின் துணையுடன் நூலகத்தில் இணைந்து புத்தகங்கள் படித்து வந்தேன். அந்த நூலகம் நான் படிக்கும் பள்ளியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. மாலை பள்ளி முடிந்தவுடன் தான் நூலகம் செல்ல இயலும்.ஆனால் அந்த நூலகர் நான்கு மணிக்கே கிளம்பிவிடுவார், பள்ளி நான்கு மணிக்கு தான் முடியும். நூலகத்தில் எப்படியாவது புத்தகம் எடுத்து விடவேண்டும் என்று சைக்கிளில் எவ்வளவு வேகம் செல்லமுடியுமோ அவ்வளவு வேகம் செல்வோம். அப்படியும் பல நாட்கள் ஏமாற்றம் தான். இப்படியாக நூலகத்தின் மூலம் தெனாலிராமன், பீர்பால், முல்லா போன்ற கதைகள் பரிச்சயமானது.

நாவல் என்றால் நான் முதலில் படித்து வந்தது ராஜேஷ்குமார் நாவல் தான், அவரது கதைகளின் ஓட்டமும் புத்திசாலிதனமான துப்பறிதலும் நாவலை முடிக்காமல் கீழ் வைக்கவிடாது. பள்ளி காலங்களில் நான் அறிந்த சில எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,, சுஜாதா, வைரமுத்து, பட்டுகோட்டை பிரபாகர்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு சிலரே, இவர்களும் நான் வார இதழ்கள் படித்து வந்ததால் தான் பரிச்சயம்.

மேல்நிலை, கல்லூரி என பின் வந்த காலங்களில் பல புத்தகங்கள் படிக்கும்
வாய்ப்புகள் கிடைத்தது. கலைஞர் அவர்கள் எழுதிய பொன்னர் - சங்கர் தான் நான் படித்த
பெரிய வரலாற்று நாவலாகும்.நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எனது வாசிப்பு
கல்லூரி நூலகம்,அரசு நூலகம் என தொடர்ந்தத்து. கவிதைகளை பள்ளி பருவத்தில்
விரும்பி படித்து இல்லை, பின்பு நான் மிகவும் விரும்பி படித்தது கவிதைகள் தான்,
வைரமுத்து அவர்களின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானது,ஆனாலும் நான்
விரும்பும் மற்றொரு கவிஞர் தபூசங்கர். அவரது ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் தான்
என்னை அவரை, கவிதைகளை பிடிக்கவைத்தது, அவரது கவிதை தொகுப்புகள் சில படித்து
உள்ளேன். கவிதைகள் ஒவ்வொன்றும் காதலை இயல்பாக, புதுமையாக, எடுத்து கூறின.
அதனால் தான் என்னவோ அவரது கவிதைகள் என்னை கவர்ந்துவிட்டன.
அவரின் ஒரு கவிதை இங்கே
"உப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே"

அவரது ப்ளாக் இங்கே கிளிக்கவும்
ஆனாலும் புத்தகங்களுடன் எனது அனுபவம் என்பது மிக, மிக குறைவு. இன்னும் பல புதகங்ககளை தேடுகிறேன், தேடிக்கொண்டு இருக்கிறேன்.
---------------------------------------------------------------------------------

டிஸ்கி:
இந்த பதிவை ஒரே மூச்சில் எழுதவேண்டும் என்று நேற்று எழுத ஆரம்பித்து நான்கு முறை மின்வெட்டு ஆனது. புத்தகங்கள் பற்றி நிறைய எழுத யோசித்து இருந்தேன், விட்டு விட்டு எழுதியதால் முழுவதுமாக எழுத பல விஷயங்கள் ஞாபகம் வரவில்லை.
மீண்டும் மின்வெட்டை அமல்படுத்திவிட்டனர்.

0 comments: